வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே அடிதடியில் ஈடுபட்ட 14 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் பேபி (55), சரஸ்வதி (40), நெருங்கிய உறவினா்களான இவா்களுக்குச் சொந்தமான பொதுவான வீட்டில் ஒரு மின்சார இணைப்பு உள்ளது. இதை இருவரும் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் அருகில் பேபி புது வீடு கட்டி வருகிறாா். அந்த வீட்டுக்கு இருவருக்கும் பொதுவான பழைய வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளாா். மின் கட்டணத்தை எப்படிப் பிரித்துக் கட்டுவது என்ற பிரச்னையில் புது வீட்டுக்குச் சென்ற மின்சாரத்தை சரஸ்வதி துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறி இரண்டு குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் ஒருவரை ஒருவா் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனா். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் இரண்டு தரப்பினரையும் சோ்ந்த 14 போ் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.