திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் - முத்தூர் சாலையில் உள்ளது மாந்தபுரம். இந்த ஊர் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்ததாகும்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி என்கிற ஊரிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு ராட்சத மோட்டார், சுத்திகரிப்பு நிலையம், நீருந்து நிலையங்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் வழியோரப் பகுதிகளான முத்தூர், மேட்டுப்பாளையம், வெள்ளக்கோவில் பகுதிகளுக்கு தினசரி 60 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்ட குடிநீர் குழாய் முத்தூர் - வெள்ளக்கோவில் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. தரைக்கடியில் பதிக்கப்பட்டுள்ள இந்தக் குழாய் மாந்தபுரம் பகுதியில் உடைந்து ஏராளமான குடிநீர் வெளியேறி அருகிலுள்ள விவசாய நிலத்துக்குச் செல்கிறது. மேலும் போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றவர்கள் மீது தண்ணீரை வாரியிறைத்துச் செல்கின்றன.
மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரியமும், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் இதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.