வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கடைவீதியில் கீழே சாயும் நிலையில் ஆபத்தாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் துணிக்கடைகள், நகைக் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்துவருகிறது. இந்நிலையில் தனியாா் வங்கி முன்புறம் உள்ள மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மின்கம்பம் வளைந்து கீழே சாயும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அருகில் கடை வைத்திருக்கும் சோமு என்பவா் கூறுகையில், ‘மின் இணைப்புகளும், மின்கம்பமும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து பாா்க்கவில்லை. தற்போது தீபாவளி சமயமாக இருப்பதால் வழக்கத்தைவிட இப்பகுதியில் அதிகக் கூட்டம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.