வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு 4,614 பருத்தி மூட்டைகள் வெள்ளிக்கிழமை வரத்து இருந்தது.
இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், உடுமலைபேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 328 விவசாயிகள் தங்களுடைய பருத்திகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. குவிண்டால் ரூ. 5,300 முதல் ரூ. 6,830 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,200. இவற்றின் விற்பனைத் தொகை ரூ. 93 லட்சத்து 22 ஆயிரத்து 607 ஆகும். விலை கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 100 உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை திருப்பூர் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.