திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றிபெற்ற உடுமலை மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் உடுமலை ஜீவா சிலம்பு விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் முதல் பரிசான தங்க கோப்பையை 8 பேரும், 2ஆவது பரிசான வெள்ளிக் கோப்பையை 5 பேரும், 3ஆவது பரிசான வெண்கல பதக்கத்தை இருவரும் வென்றனர்.
இந்நிலையில் கோப்பை வென்ற, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மு.நந்தகோபால் தலைமையிலான பயிற்சியாளர்கள் கே.எம்.மணிகண்டன், எஸ்.பி.பழனிசாமி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.