திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் கடந்த சில நாள்களாக வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதையடுத்து, மாலை 5.30 மணி அளவில் பழைய பேருந்து நிலையம், பல்லடம் சாலை, புஷ்பா ரவுண்டானா, ரயில் நிலையம், காங்கயம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையானது சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால் சாலையில் குளம் போல் ஆங்காங்கு மழை நீர் தேங்கியதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. நகரின் ஒரு சில பகுதிகளில் மின் தடையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.