திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருப்பூர், ராக்கியாபாளையம், நத்தகாட்டுத் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பி.நல்லசாமி (37). இவர் அதே பகுதியில் உள்ள சேரன் நகரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நல்லசாமி குடும்பத்துடன் கடந்த 6 ஆம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக நல்லசாமி கொடுத்த புகாரின்பேரில் திருப்பூர் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.