திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் 8,500 கிலோ துணிகளைத் திருடியதாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேற்பார்வையாளரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், அணைப்பாளையம் பகுதியில் காம்பேக்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த ஆத்திகுளத்தைச் சேர்ந்த உதயசந்திரன் (36) மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில் கல்லாம்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (28) என்பவர் ஆட்டோ ஓட்டுநராகவும், முருகன் (33) என்பவர் மிஷின் ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்னர் முருகன் ஆட்டோவில் துணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே செல்ல முயன்றார்.
அப்போது பணியில் இருந்த காவலாளி ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கேட் பாஸில் இருந்ததை விட துணியின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நிறுவன மேலாளர் ராஜ்குமாருக்கு காவலாளி தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ராஜ்குமார் விசாரணை நடத்தியபோது துணிகளை திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், மேற்பார்வையாளர் உதயசந்திரன், மோகன், முருகன் ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த ஒருமாதமாக சிறிது சிறிதாக 8,500 கிலோ துணிகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மோகன், ஆபரேட்டர் முருகன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய உதயசந்திரனையும் தேடி வருகின்றனர்.