திருப்பூரில் நீதிமன்ற உத்தரவு போலி ஆவணம் தயாரித்து சொத்துகளை அபகரிக்க முயன்ற 2 வழக்குரைஞர்களை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், தனது தந்தை பெயரில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்துகளை கர்நாடக சிவில் நீதிமன்ற உத்தரவுபோல் போலி ஆவணங்களைத் தயாரித்து சிலர் அபகரித்து உள்ளதாகத் தெரிவித்திருந்தனர். இதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் 2015 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக தாராபுரத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் ராமசாமி (78), அவரது உதவி வழக்குரைஞர் ஜனார்த்தனன் ஆகியோரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இதனிடையே, ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.