இலவச மின் இணைப்பில் மின்மீட்டர் பொருத்த எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட பகுதிகளின் ஏராளமான விவசாயிகள் இலவச மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களாக சேவூர், அவிநாசி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் இலவச மின்சார இணைப்பில் மீட்டர் பொருத்துவதற்காக மின்வாரிய ஊழியர்கள் சென்று வருகின்றனர். அதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மீட்டர் பொருத்தாமல் மின்வாரியத்தினர் திரும்பிச் சென்று விடுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் வடுகபாளையத்தில் மின்மீட்டர் பொருத்த மின்வாரியத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் உள்ளிட்டோர் அவிநாசி மின்வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து செயற்பொறியாளர் பாலன் கூறியதாவது:
வடுகபாளையத்தில் மின்மீட்டர் பொருத்த வந்தது எனக்குத் தெரியாது. எனவே, மின்மீட்டர் பொருத்த வந்த மின்வாரிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் மனு அளித்ததைத் தொடர்ந்து மின்மீட்டர் பொருத்தும் பணி கைவிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.