அவிநாசி அருகே பேரநாயக்கன்புதூரில் சாலையோரம் இருந்த 4 மரங்களை வெட்டி எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியம், மங்கரசுவலையபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பேரநாயக்கன்புதூர் புதுக்காலனி பகுதியில் சமூக ஆர்வலர்கள் 8 ஆண்டுகளாக பல்வேறு வகையான மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த 2 வேப்பமரங்கள், பூவரச மரம், வாகை மரம் என 4 மரங்களை மர்ம நபர்கள் புதன்கிழமை இரவு வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மரங்களை வெட்டி எடுத்துச் சென்ற சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, முதல்வர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் செல்வராஜ் வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்ட போது, உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.