திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை (செப்டம்பர் 14) முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும், மேலதிருப்பதி என போற்றப்படுவதுமாக மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனை இக்கோயிலில் செலுத்தலாம் என்ற ஐதீகம் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாரதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, கோவை, திருப்பூர், அவிநாசி, புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.