அவிநாசி அருகே உள்ள பழங்கரை ரங்கா நகரில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை, சின்னேரிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட ரங்கா நகர், வைஷ்ணவி கார்டன், அய்யப்பா நகர், ருக்மா கார்டன், சாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தார் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நீண்ட நாள்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சேறும் சகதியுமாக உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருபெண்கள் கடந்த 8 ஆம் தேதி இரவு தடுமாறி விழுந்தனர். அப்போதே சாலையை சீரமைக்கக் கோரி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பழுதடைந்த சாலை, தெருவிளக்குகளை தற்காலிகமாக உடனடியாக சீரமைப்பதாக ஒன்றிய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தி திங்கள்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போரட்டம் கைவிடப்பட்டது. திங்கள்கிழமைக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் புதன்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.