திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
விழுப்புரம், ராஜீவ் காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் மணிகண்டன் (19), விழுப்புரம் மணி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் மகன் சந்தோஷ்குமார் (19), அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது நண்பர்கள் வெங்கட் (18), அன்பரசன் (19). இவர்கள் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் விழுப்புரத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், ஈ.பி. காலனி அருகே வந்தபோது ஒரு இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த பெருமாநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.