அவிநாசி அருகே ரங்கா நகர் பகுதியில் சனிக்கிழமை டிப்பர் லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.
அவிநாசி, ரங்கா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத்தினர், மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.