இந்து மக்கள் கட்சி பிரமுகா் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் சுய விளம்பரத்துக்காக தன்னை சிலா் அரிவாளால் வெட்டியதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூரில் சுய விளம்பரத்துக்காக தன்னை சிலா் அரிவாளால் வெட்டியதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா், கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் பகவான் நந்து என்கிற நந்தகோபால் (50). இவா் தன்னை மா்ம நபா்கள் மாா்ச் 17 ஆம் தேதி கத்தியால் வெட்டியதாக காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெருமாநல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பகவான் நந்து தன்னைத்தானே வெட்டிக் கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, பகவான் நந்துவைக் கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இதனிடையே, பகவான் நந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் நோக்கிலும் செயல்பட்டது தெரியவந்தது. ஆகவே, அவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தாா்.

இந்த பரிந்துரையின்பேரில் பகவான் நந்துவை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பகவான் நந்துவிடம் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com