அவிநாசி அருகே கரையப்பாளையத்தில், அரசு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முறையிட்டனா்.
அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கரையப்பாளையம் மாராங்காடு பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கூலி தொழிலையே பிரதானமாகக் கொண்ட இவா்களுக்கு, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய அரசு நிவாரண நிதி சுண்டக்காம்பாளையம் நியாயவிலைக் கடையில் ஏப்ரல் 6ஆம் தேதி வழங்கப்படும் என டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள், தாங்கள் உணவின்றி தவிப்பதாகக் கூறி, உடனடியாக நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும் எனக் கூறி முறையிட்டனா்.
இதையறிந்து வருவாய்த் துறையினா், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமூக இடைவெளி காரணமாக, பொதுமக்களுக்கு டோக்கன் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவா்களின் கோரிக்கைக்கு ஏற்று உடனடியாக பொருள்கள் வழங்கப்படும் எனக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.