திருப்பூர்: விவசாயிகளை பாதிக்கும் உயர்மின் கோபுரத்திட்டத்தைக் கைவிட்டு விட்டு புதைவழித்தடம் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயலபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த புலியவலசு கிராமத்தில் விருதுநகர்-காவுத்தம்பாளையம் வரையிலான 765 கிலோ வாட் உயர்மின் உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் பங்கேற்ற கருத்தாய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு பொன்னிவாடி ஊராட்சிமன்றத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கேபிள் மூலம் கடல் வழியாக 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆப்பிரிக்காவுக்கு 1,500 கிலோ வாட் மின்சாரத்தைக் கொண்டு செல்கிறது.
மேலும் பவர் கிரீட் நிறுவனம் மதுரையில் இருந்து இலங்கை வரையில் 525 கிலோ வாட் மின்சாரத்தை புதைவழித்தடம் அமைத்து கடல் வழியாக கொண்டு செல்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை எடுத்துச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு மாடுகள் சினை பிடிக்காத மலட்டுத்தன்மையான நிலை ஏற்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமல் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
ஆகவே, விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு புதைவழித்தடம் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாராபுரம், புலியவலசு, மூலனூர் கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ஈசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.சண்முகசுந்தரம், மாநிலச் செயலாளர் எஸ்.முத்து விஸ்வநாதன், கொள்ளை பரப்புச் செயலாளர் தாராபுரம் சிவகுமார், மார்க்சிஸ்ட் தாராபுரம் வட்டச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், தாராபுரம், மூலனூர், கன்னிவாடி, கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.