குடிநீர் வசதி கோரி உடுமலை - பழனி மாநில நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை வட்டம் கண்ணம நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருள்பட்டி கிராமத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதனால் அக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை 10.30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உடுமலை - பழனி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.