திருப்பூரை அடுத்த சேவூர் அருகே தனியார் நூற்பாலையில் இருந்த மீட்கப்பட்ட 38 சிறுவர், சிறுமியர் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூர் அருகே ஆலத்தூர் மேடு பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பொதுமுடக்கத்தின்போது உரிய அனுமதி இல்லாமல் வெளிமாவட்டங்களைக் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, காவல் துறையினர், தொழிலாளர்துறையினர் சம்மந்தப்ப ஆலையில் ஆய்வு நடத்தி 35 சிறுமியர், 3 சிறுவர்கள் என மொத்தம் 38 பேரை மீட்டு திருப்பூரில் உள்ள காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையிலவ் தனி பேருந்து மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.