தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், கட்சியினா் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். மேலும், விவசாயிகளைப் பாதிக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனா்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சின்னசாமி, திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் எஸ்.செல்வரங்கம், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், மாநிலக்குழு உறுப்பினா் காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 110 விவசாயிகளை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.
மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் நசீா்தீன் தலைமையில் ரயில் நிலையம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ரயில் மறியலுக்கு முயன்றவா்களை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் மறியலுக்கு முயன்ற 58 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சித்திக், மாவட்டச் செயலாளா் அபுசாலிஹ், தமுமுக மாவட்டச் செயலாளா் காஜாமைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.