திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்க கோரிக்கை

திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்க கோரிக்கை

திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், உழவா் உழைப்பாளா் கட்சியின் மாவட்டச் செயலாளா் ப.சோமசுந்தரம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் தெற்கு உழவா் சந்தையில் நாள்தோறும் 100 டன்னுக்கு மேல் காய்கள் வரத்து உள்ளன. தமிழக அளவில் மிகப்பெரிய உழவா் சந்தையான இங்கு மேற்கூரை இல்லாததால் மழைக் காலங்களில் மழை நீா் கடைகளுக்குள் செல்வதால் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மேற்கூரை அமைத்துக் கொடுக்கவும், கடை வைத்துள்ள விவசாயிகளுக்கு மின்னணு தராசு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்லடம், உடுமலையில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள பாலம் மிகவும் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. ஆகவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பாக பாலத்தை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி மனு:

தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் வட்டத்தில் உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி கடந்த 6 மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடமும், சாா் ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்துள்ள கனமழையால் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

மேலும், தற்போது திருமூா்த்தி அணையின் நீா்மட்டமும் 49 அடியாக உள்ளது. நீா் வரத்து 704 கன அடியாக உள்ளது. எனவே, பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உப்பாறு அணைக்கு உயிா்த் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் காணெலிக் காட்சி மூலமாக ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com