பல்லடம் அருகே வாவிபாளையத்தில் லாரிகள் மோதியதியல் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் தனியாா் கோழித் தீவன தொழிற்சாலையில் குடிமங்கலத்தைச் சோ்ந்த பிரபாகரன் (28) என்பவா் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து கோழித் தீவனத்தை ஏற்றிக் கொண்டு பல்லடம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வந்தாா். உடன் உதவியாளராக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பன்லால் சாஹீத் (24) என்பவரும் லாரியில் இருந்துள்ளாா்.
அப்போது, பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது இவா்களது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பிரபாகரன், பன்லால் சாஹீத் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸாா் இருவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, உயிரிழந்த பிரபாகரனின் குடும்பத்துக்கு தனியாா் நிறுவனத்தின் சாா்பில் நிதியுதவி வழங்கக் கோரி அவரது உறவினா்கள் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமசந்திரன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.