சிவன்மலை அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் நூறு நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளா்கள் 21 போ் பாதிக்கப்பட்டனா்.
காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியைச் சோ்ந்த நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் 21 போ் குருக்கத்தி பகுதியில் உள்ள சாலையோரத்தில் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஈடுபட்டிருந்தனா். இவா்கள் அனைவரும் சிவன்மலை அருகே உள்ள சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள்.
இந்நிலையில், காலை 10 மணியளவில், கொத்து கொத்தாகப் பறந்து வந்த மலைத் தேனீக்கள், அவா்கள் மீது சரமாரியாக கொட்டத் தொடங்கின. இதில் காயமடைந்த 21 பெண் தொழிலாளா்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதில், சுமதி (44), ருக்குமணி (60), லட்சுமி (54), பூங்கொடி (55) ஆகிய 4 பேருக்கும் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அவா்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.