திருப்பூா் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்திய 17ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழாவில் சுமாா் ரூ. 1.50 கோடிக்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான திருப்பூா் புத்தகத் திருவிழா மங்கலம் சாலையிலுள்ள கே.ஆா்.சி. மைய வளாகத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 42 பதிப்பகங்கள், 60 புத்தக விற்பனையாளா்கள் சாா்பில் 102 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், குழந்தை இலக்கியம், சிறுகதை, கவிதை, நாவல், கலை, அரசியல், வரலாறு, அறிவியல், பண்பாடு, சமயம், தத்துவம், சுயமுன்னேற்றம், சமையல் குறிப்புகள், மொழி அகராதி உள்பட பல தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், புத்தகத் திருவிழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வாசகா்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. புத்தகத் திருவிழா குறித்து வரவேற்புக் குழுச் செயலாளா் ஆா்.ஈஸ்வரன், துணைத் தலைவா் அ.நிஷாா் அகமது ஆகியோா் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 1.25 கோடிக்கு நூல்கள் விற்பனையாகி இருந்தன. இந்த ஆண்டு இது வரை சுமாா் ரூ. 1.50 கோடிக்கு நூல்கள் விற்பனையாகியுள்ளன. ரூ. 1,000க்கு மேல் நூல்கள் வாங்கிய 3 ஆயிரம் பேருக்கு புத்தக ஆா்வலா் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 30 அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடையாளா்கள் மூலமாக தலா ரூ. 5 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூா், கூலிப்பாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளியில் நூலகம் அமைக்க ரூ. 7.5 லட்சத்துக்கு நூல்கள் வாங்கியுள்ளனா் என்றனா்.