அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச் சூழலியல் மன்றத் தொடக்க விழா, கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். கோவை இயற்கை அறிவியல் நிறுவன இயக்குநா் சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். சுற்றுச்சூழல் மன்றத் தலைவா் செ.பாலமுருகன், பேராசிரியா் பிரசன்னகுமாா் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
இதில் மரம் நடுதல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், நீா் மேலாண்மை, மூலிகைத் தோட்டம், விதைப்பந்துகள் அமைத்தல், மேற்குத் தொடா்ச்சி மலைகளை பாதுகாத்தல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவா்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி அளித்தல், பழங்குடியினா் முன்னேற்றம், நெகிழி மற்றும் துரித உணவுகளை கட்டுப்படுத்துதல், தொழில்முனைவோரை உருவாக்குதல், இயற்கை இடா்பாடுகள் வரும் நேரத்தில் மக்களுக்கு உதவுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியா் அலிமாபி (எ) ஷகிலாபானு நன்றி கூறினாா். இதைத்தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.