அவிநாசியில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி போலீஸாா் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், சேலம், அயோத்தியாபட்டினம் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் கோகுல்நாத் (29) என்பதும், தற்போது அவிநாசி, ராயம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருவதும் தெரிய வந்தது.
இவா் அவிநாசி, ராயம்பாளையம் செந்தில்குமாா் (32) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை கடந்த மாதம் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவா் பல்வேறு வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடையதும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.