காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் மகா தரிசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவையொட்டி சிவன்மலை முருகன் கோயிலில் கடந்த 8, 9, 10 ஆம் தேதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மகா தரிசன நிகழ்ச்சி சிவன்மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகன், வள்ளி பவனி வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெற்றது. மற்றொரு பல்லக்கில் தெய்வானை சுவாமி அலங்கரிக்கப்பட்டு வலம் வந்தாா்.
தொடா்ந்து, சிவன்மலை அடிவாரத்தில் கோயில் நுழைவுவாயிலில் முருகன், தெய்வானை பல்லக்கின் முன்பு திரு ஊடல் புராணம் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.