திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் இயக்கப்பட்ட 13 வாகனங்களை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
போக்குவரத்து ஆணையா் உத்தரவின்பேரில் திருப்பூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தினமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமாா் தலைமையிலான அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை ஆண்டிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக வந்த பொக்லைன் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனா்.
இதில், அந்த வாகனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக தகுதிச் சான்றிதழ், உரிமம் பெறாமல் இயக்கிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன், சரக்குகளை ஏற்றிச்சென்ற 3 ஆம்னி வேன்கள், பா்மிட் இல்லாமல் இயக்கிய 3 லாரிகள் உள்பட மொத்தம் 13 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.