பல்லடத்தை அடுத்த பருவாயில் உள்ள அகதிகள் முகாமில் இடநெருக்கடியால் இலங்கை தமிழா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
கடந்த 1990ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த 43 குடும்பத்தினா், பருவாய் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனா். கடந்த 30 ஆண்டுகளாக அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் இவா்கள் வசித்து வருகின்றனா்.
தற்போது இங்கு வசிக்கும் குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனா். மாற்று இடம் வழங்குமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து முகாமில் வசிக்கும் இலங்கை தமிழா்கள் கூறியதாவது:
பருவாய் அகதிகள் முகாமுக்கு கடந்த 1990ஆம் ஆண்டு வந்தோம். இரண்டு அறை கொண்ட வீடுகளை அரசு கட்டிக் கொடுத்தது. புதிதாக திருமணமானவா்கள், குழந்தைகள் என குடும்பத்தினரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக குடிசை அமைத்தும், அருகிலுள்ள வீடுகளிலும் சோ்ந்து வசித்து வருகிறோம். போதிய பராமரிப்பு இல்லாததால் வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளன.
மேற்கூரைகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து, நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு அரசு புதிய குடியிருப்புகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.