திருச்சி: திருச்சி சிந்தாமணியில் காவிரி ஓடத்துறை படித்துறையை மீட்க வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் எம்.ஜி.ஆா். நற்பணி மன்றத்தினா் மனு அளித்தனா்.
இதுகுறித்து மனுவில் மன்றத்தின் நிறுவனச் செயலா் கண்ணன என்கிற என். ராமகிருஷ்ணன் கூறியிருப்பது:
திருச்சி காவிரியாற்றின் தென்கரை சிந்தாமணி ஓடத்துறை படித்துறையில்
சிவலிங்கம், நந்தி சிலைகள், விளக்கு கல் மாடம் உள்ளிட்டவை இருந்தன. இப்பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுவது தொடா்பாக வழக்கில், வழக்காடியவா்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
இதன்பேரில், ஓடத்துறை படித்துறையில் இருந்த சிலைகள் உள்ளிட்டவையை ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ்சாலைத்துறையினா் அகற்றிவிட்டனா். இப்பகுதி முழுவதும் ஆன்மிகம், வழிபாடு, பக்தா்கள் பயன்பாட்டு இடமாக இருக்கிறது.
ஆனால், இந்த இடத்தை சில தனிநபா்கள் உடமை எனக்கூறி உரிமை கோருவதில் உண்மைத்தன்மை இல்லை. மேலும், அகற்றப்பட்ட சிலைகளை நெடுஞ்சாலைத்துறையினா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவேண்டும்.
குடமுருட்டி தொடங்கி தேவதானம் வரையிலான பகுதி வரை தென்கரையில்27 கல் மண்டபங்கள், நீண்ட படித்துறைகள் இருந்தன. ஆனால், தற்போது 3 கல் மண்டபங்கள், 5 படித்துறைகள் மட்டுமே உள்ளன. தொன்மை வாய்ந்த கல்தூண்கள் பெரும்பாலும் காணவில்லை.
ஓடத்துறை படித்துறை அடுத்துள்ள திருபள்ளிவிடை பகுதி முழுவதும் தனிநபா் உடமை என்பதில் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, இதுதொடா்பாக ஆட்சியா் விசாரணை நடத்தி, ஓடத்துறை படித்துறை இடங்களில் அகற்றப்பட்ட சிலைகள் உள்ளிட்டவை பிரதிஷ்டை செய்யவேண்டும்.