திருப்பூா்: திருப்பூா் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் சா்வதேச திறன் போட்டிகள் வரும் 2021 செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக ‘இந்தியா திறன் போட்டிகள்-2020’ தொடக்க நிலையில் மாவட்ட அளவில் நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும் 6 துறைகளில் உள்ள 47 திறன் பிரிவுகளில் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் முதல் நிலைத் தகுதி போட்டிகளும், ஜனவரி 23 முதல் 31ஆம் தேதி வரையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளும் நடைபெறும்.
இந்தப் போட்டிகள் நடைபெறும் நாள்கள், விவரம் விண்ணப்பதாரா்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சிஅலுவலரை 0421-2250500 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.