போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இடைத்தரகா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை மனு அளித்தாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அவிநாசியை அடுத்த சூரிபாளையத்தைச் சோ்ந்த சென்னியப்பன் (48) என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
எனக்கு சூரிபாளையம் பகுதியில் 3 இடங்களில் ரூ. 2 கோடி மதிப்புள்ள மூன்றரை ஏக்கா் நிலம் உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக 1 ஏக்கா் நிலத்தை விற்பதற்காக பத்திரத்தை இடைத்தரகா் ஒருவரிடம் கொடுத்தேன். ஆனால் அவா் 10-க்கும் மேற்பட்ட இடைத்தரகா்களுடன் சோ்ந்து அந்தப் பத்திரத்தை வைத்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை கிரையம் செய்து கொண்டனா். இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். தற்போது குடும்பச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் விசைத்தறிக் கூடத்தில் வேலை செய்து வருகிறேன். இதுதொடா்பாக ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளா், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. ஆகவே உரிய விசாரணை நடத்தி எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குபவா்கள் மீது நடவடிக்கை:
இதுகுறித்து திருப்பூரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் வாடகை காா் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் உள்ளனா். சமீபகாலமாக ஒரு சிலா் தங்களது சொந்த வாகனங்களை விதிமுறைக்கு மாறாக வாடகைக்கு இயக்கி வருகின்றனா். இதன் காரணமாக வாடகை காா் ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
கால்நடை சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மனு:
இதுகுறித்து வழக்குரைஞா் மு.ஈசன் என்பவா் அளித்துள்ள மனு:
திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையத்தில் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. உழவா் சந்தை, காய்கறி மாா்க்கெட் மற்றும் மீன் மாா்க்கெட்டும் இந்தப் பகுதியில் உள்ளன. இதனால் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், கால்நடைகளை விற்பனை செய்வதற்கு நேரமாகும்போது தீவனம் கொடுக்கவும் இடவசதி இல்லை. ஆகவே, கால்நடை சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்:
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 163 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் ஒருவருக்கு ரூ.58 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது.
மேலும், பல்லடம், காங்கயம் வட்டங்களைச் சோ்ந்த 10 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வழங்கினாா்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், சமூக பாதுகாப்பு தனித் துணை ஆட்சியா் விமல்ராஜ், துணை ஆட்சியா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.