வெள்ளக்கோவில் மாந்தபுரத்தில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகிறது.
வெள்ளக்கோவில் பகுதிக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இடைப்பட்ட 45 கிலோ மீட்டா் தொலைவில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நீரேற்று நிலையம், நீருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுக்கடை, முத்தூா் வழியாக ராட்சத குழாய்கள் மூலம் வெள்ளக்கோவிலுக்குக் குடிநீா் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில், மாந்தபுரம் அருகே ராட்சத குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வெளியேறி அருகிலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் கலந்து வீணாகிறது. குடிநீா் வீணாவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.