வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்ததால் பருத்தி விலை உயர்ந்தது.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தமிழகத்திலேயே பருத்தி அதிகளவு விற்பனை நடைபெறும் இடமாகும். இங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்து 330 விவசாயிகள் தங்களுடைய பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.
மத்திய அரசின் இந்திய பருத்திக் கழகம் முதன் முதலாக இந்த விற்பனைக் கூட ஏலத்தில் கலந்து கொண்டது. குவிண்டால் ரூ.5,278 - ரூ.5,500 வரை 540 குவிண்டால் பருத்திக் கழகத்தால் வாங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 20 வியாபாரிகள் 748 குவிண்டால் பருத்திகளை குவிண்டால் ரூ.3,069 - ரூ.4,400 விலைக்கு வாங்கினர்.
ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.55.23 லட்சம் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மத்திய அரசின் ஆதார விலையின் அடிப்படையில் பருத்திக் கழகம் கொள்முதல் செய்ததால் விவசாயிகளுக்கு உயர்ந்த விலை கிடைத்ததாக திருப்பூர் மாவட்ட விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.