திருப்பூரில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தின்போது சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுதிருப்பூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பூலுவபட்டி சுற்றுச்சாலையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் விதிகளை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.
இதுதொடர்பாக விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும், தனியார் தொலைகாட்சிகளிலும் வெளியானது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பறக்கும்படை குழுவினருக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டார். இதன்பேரில் பறக்கும்படை குழுவினர் சம்மந்தப்பட்ட பாருக்கு சென்று பார்த்தபோது மது விற்பனை செய்த நபர்கள் பாரை மூடிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக டாஸ்மாக் மண்டல மேலாளர் செளந்தரபாண்டியன் பரிந்துரையின் பேரில் சம்மந்தப்பட்ட பார் உரிமையாளர் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக ஆய்வில் ஈடுபட்ட பறக்கும்படை குழுவினர் தெரிவித்தனர்.