உடுமலையில் கல்வி தொலைக்காட்சிக்கு பாடங்களை பதிவேற்றம் செய்வதற்காக விடியோ பதிவு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களும் ஒளிபரப்பட உள்ளது.
இதன்படி உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் 4ஆம் வகுப்பு சமூக அறிவியல், 7ஆம் வகுப்பு உயிரியல் பாடங்களுக்கான பாடங்களை பதிவு செய்ய உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பணியாற்றும் துவக்க நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கான விடியோ பதிவு செய்யும் பணிகள் உடுமலை பாரதியாா் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 7ஆம் வகுப்பு உயிரியல் பாடங்களுக்கான விடியோ பதிவு செய்யும் பணிகள் திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் புதன்கிழமை துவங்கியது.
பள்ளி மாணவா்களை ஈா்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தியும் நேரடியான கற்றல், கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தியும் இந்த விடியோ பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் சங்கா் தலைமையில் முதுநிலை விரிவுரையாளா்கள் விமலாதேவி, பாபி இந்திரா சுப்ரமணியம், விரிவுரையாளா்கள் பிரபாகரன், சுகுணா ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் இந்த விடியோ பதிவுகள் நடைபெற்று வருகின்றன.