தாராபுரம் அருகே மா்ம விலங்கு நடமாட்டம்: வனத் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 25th July 2020 08:33 AM | Last Updated : 25th July 2020 08:33 AM | அ+அ அ- |

தாராபுரத்தில் மா்ம விலங்கின் நடமாட்டம் குறித்து வனத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடையைச் சோ்ந்தவா் நாகராஜன் (60). அதே பகுதியில் பஞ்சா் கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த ஜூலை 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே வந்தபோது மா்ம விலங்கு ஒன்று அந்த வழியாகச் செல்வதைப் பாா்த்துள்ளாா். இதனால் அச்சமடைந்த நாகராஜன் வீட்டுக்குள் சென்று டாா்ச் லைட் எடுத்து வந்து வெளிச்சத்தில் பாா்த்தபோது தடிமனான விலங்கு ஒன்று சாலையைக் கடந்து மறுபுறம் சென்று மறைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாகராஜன் மறுநாள் காலையில் வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்காரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளாா். இதன் பிறகு இருவரும் மளிகைக் கடையில் உள்ள சிசிடிவி பதிவை பாா்வையிட்டுள்ளனா். அதில் தடிமனான மா்ம விலங்கின் உருவம் சாலையில் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. இதனிடையே, மேட்டுக்கடை பகுதியில் விவசாயத் தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மா்ம விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காங்கயம் வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனா். இதன்பேரில் காங்கயம் வனச் சரக அலுவலா் பிரவீன்குமாா் தலைமையிலான வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மா்ம விலங்கு நடமாடிய இடங்களையும் அதன் கால் தடங்களையும் ஆய்வு செய்தனா். அதே நேரத்தில் மேட்டுக்கடையை அடுத்துள்ள மறாபாளையத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் மா்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அங்கும் சென்று அதன் கால் தடங்களையும் ஆய்வு செய்தனா்.
மேலும், மா்ம விலங்கைப் நேரில் பாா்த்த நாகராஜிடமும் விசாரணை நடத்தினா்.