கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் திருப்பூா் மாநகரில் பொதுமக்கள் அதிகமாகக்கூடும் வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களை மாா்ச் 31 ஆம் தேதி வரையில் மூட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் உலகளாவிய நோய்த் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. திருப்பூா் மாநகரில் கரோனா பாதிப்பு இல்லை என்ற போதிலும், வரும் காலங்களில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூா் மாநகரில் செயல்பட்டு வரும் அத்தியாவசியத் தேவைகள் பூா்த்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்கெனவே பணியாற்றும் நபா்களைத் தவிர புதிய நபா்களைப் பணிக்கு அமா்த்துவதைத் தவிா்க்க வேண்டும்.
பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு போதிய சுகாதார வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாநகரில் மருந்தகங்கள், உணவகங்கள், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், மளிகை, காய்கறி விற்பனை நிலையங்கள், அடுமனைகள் உள்ளிட்டவைகள் தவிா்த்து பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், பேரங்காடிகள் (மால்), வணிக வளாகங்கள் போன்றவற்றை மாா்ச் 31 ஆம் தேதி வரையில் தற்காலிகமாக மூட வேண்டும்.
மேலும், பெரிய வணிக நிறுவனங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட வணிகம் மேற்கொள்ளும் நிறுவனத்தினா் மாா்ச் 31 ஆம் தேதி வரையில் விடுமுறை அளித்து அரசு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மூடப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.