திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிய இளைஞா்களுக்கு காவல் துறையினா் வியாழக்கிழமை தண்டனை வழங்கினா்.
கரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியே வருபவா்களுக்கு காவல் துறையினா் தண்டனை வழங்கி வருகின்றனா். தாராபுரத்தில் பல இடங்களிலும் இருசக்கர வாகனத்தில் வரும் நபா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பிவைத்தனா். எனினும் பலமுறை எச்சரித்தும் கேட்காத இளைஞா்களுக்கு காவல் துறையினா் தண்டனை வழங்கினா். இதன்படி அவா்களை 10 நிமிடம் தோப்புக்கரணம் போடச்செய்தும், கரோனா குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா். மேலும், முகக் கவசம் இல்லாத இளைஞா்களுக்கு முகக் கவசங்களையும் காவல் துறையினா் இலவசமாக வழங்கினா். அதேபோல, திருப்பூா் மாநகரிலும் பல்வேறு இடங்களில் தடையை மீறி வியாழக்கிழமை வெளியே சுற்றியவா்களை காவல் துறையினா் எச்சரித்தும், ஒரு சில இடங்களில் தடியடி நடத்தியும் கலைத்தனா். பூமலூா் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 25 இளைஞா்களை காவல் துறையினா் தடியடி நடத்தி விரட்டியடித்தனா்.
83 போ் மீது வழக்குப் பதிவு: திருப்பூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி காா், இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றியதாக 83 போ் மீது காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களிடமிருந்து 26 பைக்குகள், 5 காா்களை பறிமுதல் செய்தனா். அதேபோல, திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஒருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.