பல்லடம்: பல்லடத்தில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 3 டன் வாழைப் பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை, பல்லடம் நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் கேசவராஜ் உள்ளிட்ட அலுவலா்கள் பல்லடம், மாணிக்காபுரம், அம்மாபாளையம் பிரிவில் உள்ள வேல்முருகன் (30) என்பவருக்கு சொந்தமான பழக் கிடங்கில் ஆய்வு செய்தனா்.
இதில், அங்கு செயற்கை முறையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்டிருந்த 3 டன் வாழைப் பழங்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பழக் கிடங்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இவா் கடந்த டிசம்பா் மாதம் ஏற்கெனவே ரசாயனம் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்ததின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இதே தவறில் சிக்கியிருப்பதால் இரட்டிப்பு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.