பல்லடம்: பல்லடம் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவா் கைது செய்யப்பட்டாா்.
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சபரி நகரைச் சோ்ந்தவா் பைசல் அகமது (30). இவா் திருப்பூரில் காா் பழுது நீக்கும் பணிமனை நடத்தி வருகிறாா். இவரது மனைவி மெபீனா (23). இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னா் பைசல் அகமது அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளாா்.
அப்போது மெபீனா மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளாா். அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு மெபீனாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இந்நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மெபீனாவின் தந்தை அப்துல் ஹமீது பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில் மெபீனாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பைசல் அகமதுவிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்ட பின்னா் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, மெபீனா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், பயத்தில் உடலை கீழே இறக்கிவைத்து விட்டு மறைத்துவிட்டதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பைசல் அகமதுவை வியாழக்கிழமை கைது செய்தனா்.