துணி முகக்கவச ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியுள்ளதால் வரும் 2 மாதங்களில் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா நோய்த் தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து முகக்கவசம், பிபிஇ கிட் ஆகியவற்றை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் தடை விதித்திருந்தது. இந்தநிலையில், உலக நாடுகளில் இருந்து துணி முகக்கவசத்துக்கு அதிக அளவிலான வர்த்தக விசாரணைகள் திருப்பூருக்கு வரத் தொடங்கியள்ளது.
ஆகவே, முகக்கவச ஏற்றுமதிக்கான தடையை விலக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இந்திய ஏற்றுமதி இறக்குமதிக்கான இயக்குநர் அலுவலகம்(டிஜிஎஃப்டி) துணி முகக்கவசத்துக்கான தடையை சனிக்கிழமை நீக்கியுள்ளது. இதில், மருத்துவப் பயன்பாடுக்கு அல்லாத துணி முகக்கவசங்களை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
துணி முகக்கவசத்துக்கான தடையை நீக்கிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இராணி, ஜவுளித்துறை செயலாளர் ரவிகபூர், வர்த்தகத்துறை செயலாளர் அனுப் வதவன், மத்திய வர்த்தகத்துறை இணைச்செயலாளர் கேசவ் சந்தர்ராவ் ஆகியோருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகியன நன்றியைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் தொழில் அமைப்பினர் கூறுகையில், மத்திய அரசு துணி முகக்கவசத்துக்கான தடையை நீக்கியுள்ளதால் வரும் 2 மாதங்களில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு முகக் கவச ஏற்றுமதி நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்தத் தடை நீக்கம் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றனர்.