தி்ருப்பூரில் இருந்து பிகார், அசாம், உத்தரப் பிரதேசத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 4,800 தொழிலாளர்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்களில் பிகார், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாததால் அவதிக்குள்ளாகி வரும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறப்பு ரயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, திருப்பூரில் இருந்து பிகார், அசாம், உத்தரப்பிரதேசத்துக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், ஒரு ரயிலுக்கு 1,600 பேர் வீதம் 3 ரயில்களில் 4,800 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு வியாழக்கிழமை வரையில் 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் 25,895 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.