திருப்பூரில் கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் சாா்பில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ப.கோபி, ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா், ஆண்டிபாளையத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை காவல் துறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை சீா்குலைக்கும் வகையில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும். ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறும் முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் பொதுமக்கள் சாா்பில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.