கரோனா எதிரொலி: சிவன்மலை அரசுப் பள்ளியில் இரட்டிப்பான மாணவர் சேர்க்கை
காங்கயம்: கரோனா வைரஸ் பிரச்னையின் எதிரொலியாக, சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
காங்கயம் ஒன்றியம், சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார தேக்க நிலை உருவாகி உள்ளது. பலர் வேலையிழந்தும், வேலை தேடியும் வருகின்றனர். இதன் காரணமாக பெருமளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிக் கட்டணம் மற்றும் பள்ளி செல்வதற்கு வேன் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த முடியாமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் ஊரிலேயே, அதுவும் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே அரசுப் பள்ளிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில், சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வருடம்தோறும் 30 முதல் 35 மாணவர்கள் புதிதாக சேர்வார்கள். இந்தக் கல்வியாண்டில் இதுவரை 65 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. மேலும், மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் இருப்பதும் இப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணம் என இப்பள்ளியின் தலைமையாசிரியர் பா.சுலோச்சனா தெரிவித்தார்.