பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பூச்சிபாளையத்தில் மின் கம்பி மீது கன்டெய்னா் லாரி உரசியதில் அதில் இருந்த பஞ்சு பேல்கள் தீப்பிடித்து எரிந்தது.
மகாராஷ்டிரா மாநிலம், நாகபுரி பகுதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்களை ஏற்றிக் கொண்டு திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பூச்சிபாளையத்துக்கு கன்டெய்னா் லாரி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது.
பெத்தாம்பூச்சிபாளையம் கிராமத்து சாலையில் வந்தபோது அப்பகுதியிலுள்ள மின் கம்பி மீது லாரியின் மேற்பகுதி உரசியதில் தீப்பொறிப் பட்டு லாரியில் இருந்த பஞ்சு பேல் தீப்பிடித்து எரிந்தது.
தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனால் பஞ்சு பேல் முழுவதும் எரியாமலும், லாரிக்கு தீ பரவாமலும் தடுக்கப்பட்டது.