காங்கயம்: காங்கயம் அருகே, மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கயம் ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உள்பட்ட குருக்கபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (65). இங்கு இவரும், இவரது கணவர் ராமசாமி (75), இவர்களது மகன் பெரியசாமி (47) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 3 தினங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பயிர்களுக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து லட்சுமி குடித்துள்ளார். இதன் காரணமாக, உயிருக்குப் கொண்டிருந்த லட்சுமியை மீட்டு, சென்னிமலையில் உள்ள மருத்துவமனையிலும், பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சிகிச்சை பலனளிக்காமல் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லட்சுமி, அவரது வீட்டிலேயே மரணமடைந்தார். அன்று மாலையே, இவர்களது கிராமத்திற்கு அருகே இருந்த மருதுறை ஊராட்சிப் பகுதியில் உள்ள மயானத்தில் லட்சுமியின் சடலத்தை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் புதைத்தனர்.
லட்சுமியின் மரணம் குறித்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்கப்படாததால், பரஞ்சேர்வழி கிராம நிர்வாக அலுவலர் நித்யா காங்கயம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காங்கயம் வட்டாட்சியர் சாந்தி, காங்கயம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், அடக்கம் செய்யப்பட்ட லட்சுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மருத்துவமனையின் 5 பேர் கொண்ட உடற்கூறு ஆய்வாளர்கள் குழு இந்தப் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டது.
இந்த பரிசோதனையின் போது, பரஞ்சேர்வழி மற்றும் மருத்துறை ஊராட்சிகளின் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர். மூதாட்டியின் மரணம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.