காங்கயம்: காங்கயம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், முத்தாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரன் (50). இவர் புதன்கிழமை மாலை 3 மணியளவில் பல்லடத்தில் இருந்து தனது ஆம்னி காரில் காங்கயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், காடையூர் அருகே வந்து கொண்டிருந்த போது, இவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீதி வேகமாக மோதியது.
இதில் கார் முழுவதுமாக நொறுங்கி, லாரியின் முன்பக்கத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த இந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த காங்கயம் போலீசார் உடனடியாக சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.