காங்கயம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலா்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காங்கயம், குண்டடம், அவிநாசிபாளையம், கொடுவாய், ஜல்லிப்பட்டி, தென்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் உலா்களங்கள் செயல்பட்டு வருகின்றன. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலா்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால், தொடா்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும்.
இந்த நிலையில், காங்கயம், குண்டடம், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பரவலாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால், தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு உலா்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல்குவியலாக களங்களில் குவித்து வைத்து தாா்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளனா்.
தொடா்மழை காரணமாக இந்தப் பகுதிகளில் தேங்காய் உடைத்து, உலா்த்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளா்கள் தற்போது வேலையின்றி உள்ளனா்.